புது தில்லி,
ஜப்பானுக்கு அடுத்த மாதம் 11, 12-ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அந்நாட்டு மன்னர் அகிஹிடோவையும், பிரதமர் ஷிண்டே அபே ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: அடுத்த மாதம் 11-ஆம் தேதி இருநாள் பயணமாக ஜப்பானுக்குச் செல்லும் பிரதமர் மோடி, இருதரப்பு மற்றும் பிராந்திய உறவுகள் குறித்தும் பரஸ்பர நல்லெணத்துடன் சர்வதேச பிரச்னைகளை அணுகுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்.
அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வர்த்தக ரீதியிலான உறவை மேம்படுத்துவது ஆகியவை குறித்து அப்போது விரிவாகப் பேசுகிறார்.
மேலும், மோடியின் பயணத்தின்போது இந்தியாவுக்கு அணுசக்தி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான தொழில்நுட்பத்தை ஜப்பான் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.