புது தில்லி,
நாட்டில் உள்ள 91 முக்கிய அணைகளில் நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் 73 சதவீதம் அளவுக்கு குறைவாகவே உள்ளது. கடந்த வாரம் நீர் இருப்பு 75 சதவீதமாக இருந்தது.
அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள முக்கிய அணைகளில் 115.457 பில்லியன் கன மீட்டர் அளவு நீர் உள்ளது. இந்த 91 ஆணைகளின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவு 157.799 பில்லியன் கன மீட்டராகும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது அணைகளில் சராசரி நீரின் அளவு சற்று குறைவாகவே உள்ளது என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழகம், கேரளம், இமாசலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.
அதே நேரத்தில் கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸô, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நீர் இருப்பு சற்று கூடுதலாகவே உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு இருந்த அளவிலேயே தற்போது நீர் இருப்பு உள்ளது.