திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெள்ளிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் போட்டியிடுகிறார். இவர் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். பிரச்சாரத்தை தொகுதி பொறுப்பாளரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
இதனையடுத்து திருநகர் 2 வது பஸ் நிறுத்தத்தில் வேட்பாளர் ஏ.கே.போஸ் வாக்குகள் சேகரித்து பேசியது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் குணமாகி கோட்டைக்கு வரும்போது வெற்றி செய்தியை நாம் காணிக்கையாக வழங்க வேண்டும். என்னை வேட்பாளராக நிறுத்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
வெற்றி சின்னமான இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். தொகுதிக்கான நலத்திட்டங்களை பெற்றுத்தருவேன் என்றார்.
பிரச்சாரத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா, முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட துணைச்செயலாளர் அய்யப்பன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மனோகரன், துணைச்செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், வார்டு செயலர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.