சென்னை: முதல்வரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ நிபுணர்கள் தொடர் சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவர் பூரண நலத்துடன் உள்ளார். வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் தொடர்ந்து 3-ஆவது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் முதல்வருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்கள் குழுவினர் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
சசிகலா, இளவரசி ஆகியோர் மருத்துவமனையில் உடன் இருக்கின்றனர்.
சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோர் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கவனித்து வருகின்றனர்.
முதல்வரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனினும், மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.