ஈரோடு: சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம் உள்ளாட்சித் தேர்தலில் மாறிவிடும் என்று திமுக தேர்தல் பணிக்குழு செயலர் செல்வகணபதி தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெற்ற ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தொண்டர்கள் நினைத்தால் மட்டுமே திமுக வெற்றி பெற முடியும். கடந்த காலத்தில் பல கசப்பான அனுபவங்களை கொங்கு மண்டலம் திமுகவுக்கு தந்துள்ளது. சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலும் திமுகவின் கை ஓங்கி உள்ளது.
கொங்கு மண்டலத்தில் இதற்கு முன்பு ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் வகையில் வரும் உள்ளாட்சியில் நம்முடைய தேர்தல் பணி இருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் கசப்பான அனுபவம் நிச்சயம் மாறிவிடும்.
நாம் ஒற்றுமையுடன் பணியாற்றினால் நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தனிக்குழுவாக செயல்படாமல் கட்சியினருடன் இணைந்து செயல்படுங்கள். நல்ல திறமையான நிர்வாகிகளை போட்டு 4 ஊராட்சிக்கு ஒரு குழு வீதம் ஏற்படுத்தி தேர்தல் பணியாற்ற வேண்டும்.
போட்டி இருக்கும் பட்சத்தில் பேசி தீர்த்து கொண்டு களத்தில் எதிரணியை சேர்ந்தவர்களை வீழ்த்த வியூகம் வகுக்க வேண்டும். விட்டு கொடுப்பவர் கெட்டு போவதில்லை; கெட்டு போக நினைப்பவர் விட்டு கொடுப்பதில்லை என்றார் செல்வகணபதி.