மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் அணையின் நீர் மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் சரிந்து வருகிறது.
உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரிநீரை திறக்க மறுத்து அங்குள்ள அணைகளை மூடிவிட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று திங்கள்கிழமை காலை வினாடிக்கு 634 கனஅடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து சரிந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. இதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 84.34 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று திங்கள்கிழமை காலை 83.39 அடியாக சரிந்தது.
நீர்வரத்தை விட காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் சரிந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 45.41 டி.எம்.சியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு வேகமாக சரிந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.