சென்னை: வடக்கு ஆந்திரப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, வட தமிழகத்தில் இன்று வியாழக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
வடக்கு ஆந்திரம் முதல் தெற்கு தமிழகம் வரை வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும், அதன் விளைவால் உருவாகியுள்ள வெப்பச் சலனத்தின் காரணமாகவும் வடதமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.