சென்னை,
அணைகளை இயக்கும் அதிகாரம் பெற்றதாக காவிரி மேலாண்மை வாரியம் இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக மத்திய நீர்வளத்துறை செயலர் சசிசேகர் கூறியிருப்பது மகிழ்ச்சி. இந்த வாரியம் இன்னொரு பொம்மை அமைப்பாக இருந்துவிடக் கூடாது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான காவிரி ஆணையம் அமைப்பதில் தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கப்பட்டது. இதற்கான வரைவுத் திட்டத்தில், ஆணைய உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தாவிட்டால், அங்குள்ள அணைகளை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இறுதியில் அத்தகைய எந்த அதிகாரமும் இல்லாத அரசியல் அமைப்பாகத் தான், காவிரி நதிநீர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. அதே போன்று காவிரி மேலாண்மை வாரியமும் அதிகாரமில்லாமல் அமைந்துவிடக்கூடாது.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாதிரியாக நடுவர் மன்றத்தால் கூறப்பட்டுள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக உள்ளது.
இந்த வாரியம்தான் பக்ரா, நங்கல், பியாஸ் திட்டங்களின் அணைகளை இயக்கி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாலய பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய 7 மாநிலங்களுக்கு நீரையும், மின்சாரத்தையும் வழங்கி வருகிறது.
50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்தச் சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது. ôவிரி பிரச்னைக்கும் இதேபோன்ற நிரந்தரத் தீர்வுதான் தேவை என்று அவர் கூறியுள்ளார்.