தூத்துக்குடி,
தூத்துக்குடி தலைமை அஞ்சல் நிலையத்தில் கங்கை நீர் விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாடுமுழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் கங்கை புனித நீர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் தொடங்கியது. தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கங்கை நீர் விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜூ தலைமை வகித்தார். முதல் விற்பனையை தூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி அஜித் தொடக்கி வைக்க காமாட்சி வித்யாலயா பள்ளி முதல்வர் மீனாகுமாரி பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட முக்கிய அஞ்சல் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கோட்ட கண்காணிப்பாளர் ராஜூ தெரிவித்தார்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், தூத்துக்குடி தலைமை அஞ்சலக அதிகாரிகள் ராஜா, நாகராஜன், விற்பனை நிர்வாகிகள் சங்கரகுமார், மனோகர் தேவராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.