தோல்வி பயத்தின் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலை ஆளும்கட்சி தள்ளி வைப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:-
உள்ளாட்சித் தேர்தலை மே மாதத்துக்குள் நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று ஏன் சொல்கிறது என்றால், ஆளும்கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதால், அதை நடத்துவதற்கு தயாராக இல்லை. தற்போது வழக்கு ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி, குறிப்பாக அந்த துறையின் அமைச்சரோ அல்லது பிரதமரோ விவசாயிகளை அழைத்துப் பேசி, இதற்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கருத்து.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தில்லிக்குச் சென்று, விவசாயிகளைச் சந்தித்து, அவர்களிடத்தில் பேசி, பிரதமரை சந்தித்து விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்