பெய்ஜிங்: தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணம் இந்தியா உடனான உறவை கடுமையாக பாதித்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுங்யிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் தலாய் லாமா பயணம் மேற்கொள்வது குறித்து சீனா தெரிவித்த கவலையை இந்தியா அவமதித்து விட்டது.
இது இந்தியாவுடன் சீனா பாராட்டி வரும் சீரிய உறவை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது. இதனை இந்திய பிரதிநிதிகளிடம் தெரிவிப்போம்” என்றார். இதனையடுத்து, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி விஜய் கோகலேவிடம் தலாய்லாமா பயணம் குறித்து சீனா தனது கவலையை தெரிவித்ததாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக 9 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள தலாய்லாமா நேற்று அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமிங் மாவட்டத்தில் உள்ள மோம்டிலா பகுதிக்கு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, பயணத்தை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.