ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள பிரதான நதியான ஜீலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், ஜம்மு, மத்திய காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளில் உள்ள முக்கியப் பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஜம்முவில் பாயும் பெரிய நதியான ஜீலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், ஜீலம் நதியின் வெள்ள எச்சரிக்கை குறியீட்டை ஆற்றின் நீர்மட்டம் நெருங்கி வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.