ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து காரணமாக, தொழிலகங்களுக்கு புதன்கிழமை (ஏப். 12) விடப்பட்டிருந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் கா.பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:- சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி, தொகுதிக்குட்பட்ட அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் (தினக்கூலி தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் உட்பட) வாக்குப் பதிவு தினமான ஏப்ரல் 12-இல் ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து வேலையளிப்பவர்களும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள். இப்போது இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், புதன்கிழமையன்று அறிவிக்கப்பட்டிருந்த, விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது என தொழிலாளர் ஆணையர் கா. பாலச்சந்திரன், தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.