விழுப்புரத்தில் விதிகளை மீறி இயங்கிய புதுவை மாநில சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்து துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோகன் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர்கள் பாலகுருநாதன், கவிதா, பிரான்சிஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர், வியாழக்கிழமை அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி சுங்கச் சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, விழுப்புரம் பகுதியிலிருந்து சென்னை நோக்கி, பொது மக்களை ஏற்றி வந்த ஆம்னி சொகுசுப் பேருந்தை ஆய்வு செய்தனர். அதில், புதுவை மாநில பதிவெண்கொண்ட அந்த தனியார் சொகுசு பேருந்தில், தமிழகத்தில் இயக்குவதற்கு உரிய வரி செலுத்தாமல் விதிமீறி இயக்கப்பட்டது தெரிய வந்தது.
வரிசெலுத்தாமல், விழுப்புரம் மாவட்டத்தில், பொது மக்களை ஏற்றிச் சென்றதால், அந்தப் பேருந்தை வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அந்த பேருந்துக்கு ரூ.43 ஆயிரத்து 200 வரி வசூலிப்பு செய்த, விழுப்புரம் வட்டார போக்குவரத்துத் துறையினர், ரூ.5 ஆயிரத்து 400 அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.