உதகையில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள சூழலில், வார இறுதி நாள்களில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உதகையில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள சூழலில் வார நாள்களைவிட வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கிறது. உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு நடப்பு வாரத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை சுமார் 12,000 பேரும், சனிக்கிழமை 20,000 பேரும், ஞாயிற்றுக்கிழமை 26,000 பேரும் வந்தனர்.
தாவரவியல் பூங்கா தவிர, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், மரவியல் பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், கொடநாடு காட்சிமுனை என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் நீலகிரியின் தயாரிப்புகள், உல்லன் ஆடைகள், கலைப் பொருள்கள் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.