ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அண்மையில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக தொடக்கத்தில், அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 16 குழிகள் தோண்டப்பட்டன. அதன்பின்னர், பள்ளிக்கு பின்புறமுள்ள அழகன்குளம் கோட்டைமேடு பகுதியில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த அகழாய்வின் மூலம் பண்டைய காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய ஆபரணப் பொருட்கள், மண்பாண்டங்கள், நாணயங்கள் உள்ளிட்டவை கண்டு எடுக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வு பணிகள் அரசு நிர்ணயம் செய்த 50 லட்சம் ரூபாய் நிதி முடிவடைந்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூதாதையர்களின் வரலாற்று நிகழ்வுகளை உலகுக்கு வெளிப்படுத்த அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.