புதுச்சேரி : புதுச்சேரிக்கு வந்த முதல்வர் எடப்பாடியை தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் நேரில் வரவேற்றது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், அசானனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகிய 4பேரும் தினகரனின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து தினகரனை சென்னையில் பல முறை சந்தித்து ஆதரவளித்து வந்த நிலையில் கடலூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை புதுச்சேரி வழியாக கடலூர் செல்லும் போது மரப்பாலம் சந்திப்பு அருகே சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகிய மூவர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி கூறியது: கடலூர் செல்லும் தன்னை புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றது மகிழ்ச்சியை தருகின்றது என்று தெரிவித்தார். பின்னர் அவர் கடலூருக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது;
அதிமுகவினர் அனைவரும் ஓரே அமைப்பினர் தான். தமிழக முதல்வர் புதுவை வழியாக கடலூர் செல்கிறார். இதனால் அவரை நாங்கள் மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்து மாலை அணிவித்தோம். ஏற்கெனவே சசிகலாவை பொதுச் செயலாளரவும், தினகரனை துணைப் பொதுச் செயலாளராகவும், எடப்பாடியை தலைமை நிலையச் செயலாளராகவும் தான் குறிப்பு தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளோம்.
முதல்வரை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என்றார். தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதிமுக உறுப்பினர்கள் 3 பேர் எடப்பாடி அணிக்கு தற்போது ஆதரவு தெரிவித்து இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.