கன்னியாகுமரி மீனவர்களின் தொடர் போராட்டம் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்கள் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சின்னத்துறையில் இருந்து குழித்துறை நோக்கி நடை பயணம் மேற்கொண்ட அவர்கள் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
இதைதொடர்ந்து குழித்துறை ரயில் நிலையத்திற்கு சென்ற அவர்கள், அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 5ஆயிரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மீனவர்களின் தொடர் போராட்டம் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர்.