சென்னை: தமிழகம் முழுவதிலும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்படும் பேனர்களில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் வழக்கு பதிவு செய்துள்ளார்.
பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பேனர் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் கோவை, சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூரைச் சேர்ந்தவர் கே.ரகுபதி (32). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், விடுமுறையில் கோவை வந்த ரகுபதி, பழனி கோயிலுக்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் ரகுபதியின் இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ரகுபதி, பின்னால் வந்த குப்பை லாரி மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து கோவை மாநகரப் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குப்பை லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் நயினார் கோயிலைச் சேர்ந்த எம்.மோகன் என்பவரை கைது செய்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்படும் பேனர்களில் எந்தவிதமான நீதிமன்ற உத்தரவும் மீறப்படவில்லை. இருப்பினும், ரகுபதியின் விபத்தைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கு முன்பாகவே கோவையில் 14 இடங்களில் அலங்கார வளைவுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆகவே, அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் எந்தவொரு பேனரையும் அகற்றத் தேவையில்லை. இந்த விபத்தில் திமுக கேவலமாக அரசியல் செய்து வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்படும் பேனர்களில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் வழக்கு பதிவு செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவை அவமதித்த தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.