புதுதில்லி: ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களில் 180 பேர் லட்சத்தீவு அருகே இருப்பதாக இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கர்நாடகா, கேரளா, லட்சதீவு ஆகிய கடலோர பகுதிகளில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படை 15 ரோந்து மற்றும் பிற கப்பல்களையும், 4 விமானங்களையும், 1 ஹெலிகாப்டரையும் மீட்புப் பணிக்காக முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், மாயமான மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர கோரி வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் நேற்று, 8 மீனவ கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். நேற்று காலை முதல் நடந்த இந்த மறியல் போராட்டம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், காணாமல் போன மீனவர்களில் 180 பேர் லட்சத்தீவு அருகே இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
17 படகுகளுடன் சென்ற 180 மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு அருகே உள்ள மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர இந்திய கடற்படை முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 662 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில், 259 மீனவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் வீரவால், மராட்டிய மாநிலம் தேவகார்க் மற்றும் மாள்வான், கர்நாடகாவின் கார்வார், லட்சதீவின் அன்டோர்த், கால்பேனி, பிட்ரா, கில்டான், அகாத்தி, சீலெட் ஆகிய பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 139 மீன்பிடி படகுகளுடன், 1660 மீனவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள கற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சி.ஜி.டொர்நியர் கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திரா மீனவர்களை கரைக்கு திரும்புமாறு எச்சரித்துள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த 9 கப்பல்கள் தமிழகம் மற்றும் ஆந்திரா கடலில் உள்ள மீனவர்களை பத்திரமாக அருகில் இருக்கும் கரையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.