ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச்சண்டையின் போது, அந்த பகுதியைச் சேர்ந்து பெண் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சண்டை நிறைவு பெற்றுவிட்டதாகவும், தொடர்ந்து அப்பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்று பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் கலஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹந்த்வாரா, சோபார், பரமுல்லா, குப்வாரா ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.