குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நாளை மறுநாள் (14-ந்தேதி) நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடந்து வந்தது.
பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரசுக்காக ராகுல் காந்தியும் குஜராத்தில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தனர். நிறைவு நாளான இன்று மோடியும் ராகுலும் அகமதாபாத்தின் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்
மாலை 5 மணியுடன் பிரச்சாரத்திற்கான அவகாசம் முடிந்துள்ள நிலையில் ராகுல் காந்தி குஜராத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்பே காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிட்டதாகக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, “குஜராத் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து 1+1=2 அல்ல. 11 என நிரூபிப்போம் என்றும் குஜராத்திற்கு வளர்ச்சியைக் கொண்டுவருவோம் என்றும் உறுதிபட கூறியுள்ளார்.
வரும் 18-ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். அன்று மதியம் குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும்.