சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் பறக்கும்படை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவையிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன் இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், அத்தொகுதிக்கு மீண்டும் இடைத் தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடத்தப்படும் என்று சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பணம் பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் கருப்புச்சாமி என்பவரை பறக்கும் படையினர் பிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது பறக்கும் படையினரை தாக்கிவிட்டு கருப்புச்சாமி ஆதரவாளர்கள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து சென்னை புது வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.