புதுதில்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து அவரது ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனும் போட்டியிட்டனர். இருவரும் இரட்டை இலை சின்னத்தை கோரியதால். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் தொப்பி சின்னத்திற்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் அளித்ததை தொடர்ந்து தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம்.
இதையடுத்து இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஏப்ரல் 16-ஆம் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் கடந்த ஜூலை மாதம், தில்லி போலீஸார் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இடம்பெறவில்லை.
இதுதொடர்பான வழக்கு தில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல முறை தரகர் சுகேஷ் சந்திரசேகர் மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீஸார் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றுள்ளது.
தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவாலா தரகர்கள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.