சிலைக்கடத்தல் வழக்கில் சிறையில் இருந்த டி.எஸ்.பி., காதர் பாட்ஷாவுக்கு ஜாமின் வழங்கி கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி ஆரோக்கியராஜ் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார். அப்போது 6 பழங்கால சிலைகள் கிடைத்தன இந்த சிலைகளை ஆரோக்கியராஜ் விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து தகவல் கிடைக்க போலீஸ் அதிகாரிகள் காதர் பாட்ஷா, சுப்புராஜ் ஆகியோர் ஆரோக்கியராஜிடம் இருந்து சிலைகளை பறிமுதல் செய்து கடத்தி வந்தனர்.
கடத்தி வந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சென்னை ஆழ்வார்பேட்டை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் விற்றுவிட்டனர். இதையடுத்து சிலை கடத்தல் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் காவலர் ஒருவர் எழுதிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த போது காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் அவற்றை 6 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி காதர் பாட்ஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்தது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த காதர்பாட்ஷாவை தேடும் பணி தீவிரமடைந்தது. கும்பகோணத்தில் பதுங்கியிருந்த காதர்பாட்ஷாவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 13 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று சிலைக்கடத்தல் வழக்கில் சிறையில் இருந்த டி.எஸ்.பி., காதர் பாட்ஷாவுக்கு ஜாமின் வழங்கி கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.