திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அடுத்த முத்தூர் அருகே திங்கள்கிழமை வீட்டில் மனைவிக்கு சுகப்பிரசவம் செய்த கணவர் அரசு மருத்துவர்களின் அறிவுரையைப் புறக்கணித்து பிடிவாதம் செய்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முத்தூர் சக்கரபாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இன்ஜினியரிங் பட்டதாரி. இணையம் மூலம் வீட்டிலிருந்தே சாப்ட்வேர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி. நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த நந்தினிக்குப் பிரசவ வலி ஏற்பட, ஆங்கில மருத்துவம் பிடிக்காத கணவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
ஆண் குழந்தை பிறந்து தாயும், சேயும் நலமாக இருந்துள்ளனர். இது குறித்து முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஒருவருக்குப் பேச்சுவாக்கில் சதீஷ்குமார் சொல்ல, மருத்துவர் மூலம் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி அகற்ற வேண்டுமெனக் கூறியுள்ளார்.
அவர் முடியாதென மறுத்ததால் இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட மருத்துவ அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சிகிச்சை பெற வலியுறுத்தியும் பெற்றோர் ஏற்கவில்லை.
உள்ளூர் மக்கள் கூட்டம் கூடி வாக்குவாதம் ஏற்பட்டது. தாயின் கருப்பை வாயைத் தைக்க வேண்டும். கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டுமெனக் கூறி, வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் தொப்புள் கொடி அகற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இருந்தாலும் தடுப்பூசி மற்றும் மருந்து செலுத்த அனுமதிக்காமல் எனது உரிமையில் யாரும் தலையிட முடியாதென பிடிவாதமாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டம் என்ன சொல்கிறது என்பதை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.