பிரதமர் நரேந்திர மோடி இன்று மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றார்.
மிசோராமில் அஸிவால் நகரில் 60-மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்பாசன திட்டத்தை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேகாலயாவில் ஷில்லாங்-நாங்ஸ்டோன்-ரோக்ஜெயிங்-துரா ஆகியவற்றை இணைக்கும் சாலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இவ்விழாக்களை துவக்கி வைத்த பிரதமர் பேசும் போது
ஷில்லாங்-நாங்ஸ்டோன்-ரோக்ஜெயிங்-துரா சாலை திட்ட பணிகள் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒரு நேரடி இணைப்பை உருவாக்கும். பயண நேரம் கணிசமாக குறைக்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு அரசு 32 ஆயிரம் கோடி செலவில் நான்கு ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை அனுமதித்துள்ளது. மேகாலயாவை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்புகிறோம். கடந்த 2016 மே மாதத்தில் மேகாலயாவுக்கு நான் வந்திருந்த போது, சுற்றுலாத்துறை மேம்பாடு பற்றி பேசினேன்.
கடந்த ஆண்டு, நான் வடகிழக்கு சபை கூட்டத்தை ஷில்லாங்கில் ஆரம்பித்தேன். மொரார்ஜி தேசாய்க்கு பிறகு, வடகிழக்கு சபை கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. மாநிலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி அளித்துள்ளது, என்று கூறினார்.