சென்னை: 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெறுவார் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
தேர்தல் அரிகாரியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறுகையில், ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும். எங்கள் கட்சி நிர்வாகிகளை தாக்குவதுடன் பணப்பட்டுவாடா செய்வதாக தவறான தகவலை கூறுகின்றனர். அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர். 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெறுவார் என்பதால் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி. புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆகியோரின் வெற்றி சின்னமான இரட்டை இலையும் எங்களுக்கு கிடைத்து உள்ளதால் நாங்கள் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் பணப்பட்டுவாடா என்று எதையாவது கூறுகின்றனர். அதை ஊடகங்களிலும் தெரிவிக்கின்றனர். இது எதிர்க்கட்சி செய்யும் திட்டமிட்ட சதி. எதிர்க் கட்சியில் சிலர் அதிமுகவின் கரை வேட்டியை கட்டிக் கொண்டு அராஜகங்களை செய்து விட்டு எங்கள் மீது பழிபோடுகின்றனர். தேர்தல் ஆணையம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்ற தொகுதி. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் எதிர்க்கட்சிகள் தோல்வி பயம் காரணமாக மக்களை திசை திருப்ப பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இந்த தேர்தல் நடக்கத்தான் போகிறது. இதில் எந்தவித குறைபாடு இல்லை. தேர்தல் நியாயமாக நடக்கிறது. எனவே எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.