இஸ்லாமாபாத்: புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் மனைவியை பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஊழல் வழக்கை ஆஜராவதற்காக இன்று லாகூர் வந்தனர்.
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிபின் மனைவி குல்சூம் நவாஸ் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை காண்பதற்காக லண்டன் செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என தனக்கெதிரான ஊழல் வழக்கு விசாரணையின்போது நவாஸ் ஷெரிப் நீதிபதியிடம் கேட்டு கொண்டார்.
டிசம்பர் 5-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை ஒருவார காலம் விசாரணையின்போது நேரில் ஆஜராக விலக்களித்து நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, நவாஸ் ஷெரிப் டிசம்பர் 4-ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். இன்று மீண்டும் லண்டன் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், ஊழல் வழக்கை எதிர்கொள்வதற்காக நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் இன்று காலை 8 மணியளவில் பாகிஸ்தான் சர்வதேச விமானம் சேவையின் பிகே758 விமானம் மூலம் லாகூர் நகரை வந்தடைந்தனர். லாகூர் விமான நிலையத்தில் ஆளுங்கட்சியினர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
டிசம்பர் 19-ஆம் தேதி நடக்கும் விசாரணையில் ஆஜராவதற்காக நவாஸ் மற்றும் மரியாம் இருவரும் நீதிமன்றத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவாஸ் சட்டத்தின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி நீதிமன்றத்தில் மூன்று ஊழல் வழக்குகளை நவாஸ் எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.