பாகிஸ்தானில் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி; 44 காயம்

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தானில் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி; 44 காயம்

கராச்சி/இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 44 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரின் சர்கோன் சாலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுமார் 400 பேர் பங்கேற்றிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.

பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற பாதுகாப்பு படை அவர்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளில் ஒருவன் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் 2 பெண்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 44 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தேவாலய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்து காவலர்களின் துரித நடவடிக்கையால் மிகப்பெரிய துயரம் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இரண்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர் என்றும் அவர்களை தேடும் பணி நடக்கிறது என போலீஸ் டிஐஜி அபாதுல் ரஸ்ஸாக் ஷீமா தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை, முன்னதாக அங்கு சிறுபான்மையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளநிலையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பெரும் பதற்றைத்தை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலை அடுத்து குவெட்டாவில் உள்ள மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு படை நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. 

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் அஹஸான் இக்பால் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு பெஷாவர் பள்ளித் தாக்குதலின் போது 150 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களே. மூன்றாவது ஆண்டு நிறைவு நாளான இன்றைய தினத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com