கேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் மீது மர்மநபர்கள் தாக்குதல்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
கண்ணூர்: கேரளா மாநிலம் கதிரூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவரை மர்மநபர் தாக்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டம் கதிரூர் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் பிரவின் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து கடுமையாக தாக்கி உள்ளது. இதில், பலத்த காயமடைந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் உயிருக்கு ஆபாத்தான நிலைமையில் கோழிக்கோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மாதம், நான்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கண்ணூர் மாவட்டத்தில் தாக்கப்பட்டனர்.
அக்டோபரில் ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டர் தாக்கப்பட்டு காயமடைந்தார், அதே நேரத்தில் பாஜக கட்சி அலுவலகத்தில் குண்டுகள் வீசப்பட்டன.
பாஜக அரசியல் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த சில மாதங்களாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன என்று ஆளும் இடதுசாரி அரசு மீது பாஜக குற்றம்சாட்டியதுடன், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.