லண்டன்: சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சியில், 2018-இல் இந்தியா மிகப்பெரும் முன்னேற்றத்தை அடையும் என்றும், உலக நாடுகள் வரிசையில் இந்தியா 5வது இடத்தை எட்டும் என்றும் லண்டனை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தமான நிலையில் இருந்து வருகிறது. மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அந்த முடிவின் அடிப்படையில், நடப்பாண்டில் உலகின் 7வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்கும் இங்கிலாந்து, ஃபிரான்ஸ் நாடுகளை பின்னுக்குத் தள்ளி, 2018-இல் உலகின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நடப்பாண்டின் முதல் காலாண்டில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா அடுத்தடுத்த பொருளாதார பின்னடைவுகளை சந்தித்த போதிலும், பின்னர் அவற்றை சமாளித்து அடுத்த காலாண்டு வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் என்றும் துணைத் தலைவர் டக்ளஸ் மக்விலியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல சீனா, அமெரிக்காவை மிஞ்சும் வகையில் வேகமான பொருளாதார வளர்ச்சியில் சென்றுகொண்டிருப்பதாகவும், டிஜிட்டல் புரட்சி மற்றும் எரிசக்தித் துறையில் கண்டுள்ள முன்னேற்றங்களால் இந்தியப் பொருளாதாரம் மேன்மையடையும் என்றும், 2032-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் 3வது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகின் முதல் பொருளாதார சக்தியாக விளங்கும் அமெரிக்காவை, 2030-இல் சீனா முந்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அதே போல 11வது இடத்தில் உள்ள ரஷ்யா 17வது இடத்திற்கு பின்னோக்கி செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார பின்னடைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.