கிணறு தூர்வாரும் போது கல்விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கவுண்டனூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கோபால்(55). இவர் அதே பகுதியில் விவசாயக் கிணற்றில் செவ்வாய்க்கிழமை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, கிரேன் மூலம் கிணற்றிலிருந்து கல்கள் மேலே எடுக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், கிரேனிலிருந்த மேல் எடுக்கப்பட்ட பெரிய அளவிலான கல் ஒன்று தொழிலாளி கோபால் மீது விழுந்தது.
இதில் பலத்தை காயமுற்ற அவரை மீட்டு, சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கொண்டுச் சென்றனர்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து, பாலக்கோடு போலீஸர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.