புதுதில்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிடோரும் ஸ்டாலினுடன் சென்றுள்ளனர்.
கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஆனால் சபாநாயகர் இதை ஏற்கவில்லை. அப்போது தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்கள். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. புத்தகங்கள் கிழித்து வீசப்பட்டன. மைக்குகள் உடைக்கப்பட்டன. இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் சட்டை கிழிந்தது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜியை சந்தித்து புகார் மனு கொடுக்க மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு இன்று மாலை 7 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று அவர் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். அவருடன் துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிடோரும் சென்றனர்.