குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (பிப்.23) சந்திக்க உள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைவதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் சனிக்கிழமை (பிப்.18) நடைபெற்றது. திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியினரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை பேரவைத் தலைவர் தனபால் ஏற்காததால், திமுக உறுப்பினர்கள் வரலாறு காணாத வன்முறையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, திமுகவின் உறுப்பினர்கள் அனைவரும் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டு, எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 122 வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
ஆளுநரிடம் புகார்: எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடைபெற்ற வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் சந்தித்து மனு அளிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளது.