திருநெல்வேலி: கூந்தன்குளம் பறவைரள் சரணாலயத்தில் 4 ஆயிரம் பறவைக் கூடுகள் காலியாகவே உள்ளன. 140 வகையான பறவைகள் வந்து செல்லும்நிலையில் 12 வகை பறவையினங்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து 34 கி.மீட்டரில் அமைந்துள்ள கூந்தன்குளம். இங்குள்ள கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்த நீர் பரப்பில் 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது சரணலாயம். பறவைகள் புகலிடத்தில் பூநாரைகளின் வரவு அதிகமாக இருக்கும் இடமாகவும் விளங்குகிறது. சைபீரிய பகுதியில் இருந்து வருகை தரும் பட்டை தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என 43 நீர்ப் பறவைகள் கூந்தன் குளத்திற்கு ஆண்டு தோறும் வருகை புரிவது கணக்கிடப்பட்டுள்ளது. ஒராண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சூழல் மாறுபாடு காரணமாகவும், பருவமழை தொடர்ந்து பொய்த்து வருவதாலும் கூந்தன்குளம் சரணாலயத்தில் பறவைகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. மாவட்ட வனத்துறையுடன், பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்திய பார்வையிடல் நிகழ்வில் இவை உறுதி செய்யப்பட்டன. .
இதுதொடர்பாக, வனச்சரக அலுவலர் பி.கே. ஸ்டாலின் கூறுகையில், ஆஸ்திரேலியா, ரஷியா, ஜெர்மனி, மங்கோலியா, நைஜீரியா, சைபீரியா ஆகிய நாடுகளில் கூந்தன்குளத்துக்கு பறவைகள் வந்து செல்வதாகவும், புள்ளி மூக்கு வாத்து, பூநாரை, அரிவாள் மூக்கன், பிளமிங்கோ, கரண்டி மூக்கு உள்ளான் ஆகிய பறவைகளை மாணவர்கள் கண்டு ரசித்ததாகவும் தெரிவித்தார்.