மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு பணத்தில் பொது இடத்தில் நினைவிடம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சமூக நீதிக்கான வழக்குரைஞர்கள் பேரவையின் தலைவர் கே.பாலு தாக்கல் செய்த மனு விவரம்:
அண்மையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று சுட்டி காட்டியுள்ளது. தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஜெயலலிதா பெயரில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்தத் திட்டங்களில், ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, அவர் சார்ந்த கட்சியினர் "அம்மா' என அழைக்கின்றனர்.
இந்த நிலையில், மறைந்த முதல்வருக்கு அரசு பணத்தில் நினைவிடம் கட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதுதொடர்பாக, கடந்த 20 -ஆம் தேதி அளித்த மனுவுக்கு இதுவரை எந்தவித பதிலும் இல்லை.
எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு பணத்தில் பொது இடத்தில் நினைவிடம் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்களில் அவரது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.