கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதற்கு ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றியே சாட்சி என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசினார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் எதிர்த்தனர். மக்களை இன்னலுக்கு ஆளாக்கிய பாஜக அரசுக்கு தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்டுவர் என்று விமர்சித்தன.
இந்நிலையில் ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாத் மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 40 வார்டுகளில் பாஜக 30 வார்டுகளில் பெரும்பான்மை பெற்றது.
தேர்தல் வெற்றி குறித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஃபரீதாபாதில் பாஜக பெற்ற வெற்றியானது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற எங்கள் கட்சியின் சித்தாந்தத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் அனுமதி முத்திரையைப் பதித்துள்ளனர்.
ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கு மக்கள் ஆதரவு அளித்து வரும் வேளையில் ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன என்பது தற்போது தெளிவாகிறது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின்னர் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான சண்டீகரிலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து 6-ஆவது முறையாக ஃபரீதாபாதில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி அடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.