வேலூர்: காட்பாடி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் இருவரை புதன்கிழமை கத்தியால் குத்தியதாக முதல்வரை போலீஸôர் தேடி வருகின்றனர்.
காட்பாடியில் உள்ள கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டில் 72 பேரும், இரண்டாம் ஆண்டில் 97 பேர் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரிக் கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கிடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில், கல்லூரியில் வியாழக்கிழமை (ஜன12) பொங்கல் விழா நடத்த அனுமதி கோரி மாணவர் பேரவை செயலாளர் ஜெகன்(25), ராஜன்(26) உள்பட 5 பேர் முதல்வர் அறைக்குச் சென்றனர்.
அப்போது (பொறுப்பு) முதல்வரான எஸ்.பார்த்திபனுக்கும், மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த முதல்வர் பேனா கததியால் மாணவர் ராஜன் கையில் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற ஜெகன் கழுத்திலும் கத்திக் குத்து விழுந்தது.
இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியேறிய மாணவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து மாணவர் பேரவை நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் விருதம்பட்டு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான முதல்வர் பார்த்திபனைத் தேடி வருகின்றனர்.