சென்னை, கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் செலவு செய்த கணக்கு விவரங்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக ஸ்டாலின் இதுவரை உயர் நீதிமன்றத்தில் 4 முறை நேரில் ஆஜராகியுள்ளார்.
அவரிடம் சைதை துரைசாமி தரப்பு மூத்த வழக்குரைஞர் டி.வி.ராமானுஜமும், வழக்குரைஞர் கே.செளந்தர்ராஜனும் ஏற்கெனவே குறுக்கு விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் செலவு செய்த கணக்கு விவரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதையேற்ற நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 23-க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். கடந்த ஜனவரி 2-இல், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் செலவு செய்த கணக்கு விவரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.