மணல் குவாரிகளில் மின்னணு முறையை அறிமுகப்படுத்தக் கோரி மனு: 2 வாரத்தில் பொதுப்பணித்துறை பதிலளிக்க நோட்டீஸ்

மணல் குவாரிகளில் வரைவோலை, ஸ்வைப்பிங் மிஷின், கடன், பற்று அட்டைகள் பயன்படுத்த 

சென்னை

மணல் குவாரிகளில் வரைவோலை, ஸ்வைப்பிங் மிஷின், கடன், பற்று அட்டைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கோரிய மனுவுக்கு இரண்டு வாரத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்லராஜா மணி தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த 2003- ஆம் ஆண்டு முதல் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தொடக்கத்தில் மணல் குவாரிகளில் வரைவோலை (டி.டி) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டு காலமாக, ரொக்கமாக கொடுத்து மணலை கொள்முதல் செய்து வருகிறோம். மணல் கொள்முதலுக்கு ஏற்கெனவே இருந்த முறை கைவிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்தாண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கையால், ஏடிஎம்.களில் போதியளவில் பணம் எடுக்க முடியவில்லை.

எனவே, இணையதளம் மூலம் மணல் குவாரிகளில் இருந்து மணல் கொள்முதல் செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், மணல் கொள்முதலுக்காக தொகையை ஸ்வைப்பிங் மிஷின், வரைவோலை, பற்று, கடன் அட்டை உள்ளிட்ட மின்னணு முறைகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இது தொடர்பாக, கடந்தாண்டு டிசம்பர் 1-இல் மனு அளித்தோம். ஆனால், அந்த மனு மீது இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இணையதள வசதி முறையை அறிமுகப்படுத்துவதால், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் நுழைவது தடுக்கப்படும். ஆகையால், மணல் குவாரிகளில் -ஸ்வைப்பிங் மிஷின்-, வரைவோலை, கடன் மற்று பற்று அட்டைகளை பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜீவ் சக்தேர், மனுவுக்கு இரண்டு வாரத்தில் பொதுப் பணித்துறை செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com