ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்தும் குரல் கொடுத்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
எனவே, இந்தாண்டாவது பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக நடிகர்கள் கமல்ஹாசன், ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினியும் இணைந்துள்ளார். 2016-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விகடன் விருது கபாலி படத்தில் நடித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று வழங்கப்பட்டது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ஜல்லிக்கட்டுக்கு எத்தகைய விதிமுறைகளை வேண்டுமானாலும் கொண்டு வரலாம் என்றார். ஆனால் தமிழ் கலாச்சாரம் காக்கப்பட ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.