சிதம்பரம்,: ஜல்லிக்கட்டு தடையை கண்டித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரியும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலையின் அனைத்து துறை மாணவ, மாணவியர்களும் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜேந்திரன்சிலை அருகே பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பொறியியல், கலை, அறிவியல், வேளாண்மை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்த்துறை மாணவ, மாணவியர்கள் பங்கேற்று கோஷமிட்டனர்.
மேலும் மத்திய, மாநில அரசை கண்டித்து பல்வேறு மாணவ, மாணவியர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக்க்கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்று பங்கேற்றனர்.
மாணவர்கள் போராட்டத்தை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா தலைமையில் 5-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.