ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், புதுச்சேரியில் போராட்டங்கள் வலுத்து வருகின்றது.
மாணவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து மனித சங்கிலி போராட்டம் உட்பட பல போராட்டங்களை நடத்தினர். சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை தொடங்கிய மாணவர்கள் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று இரவு அமைச்சர்கள் பாண்டியராஜன், ஜெயக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பிரதிநிதிகள் 10 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்து அலங்காநல்லூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.