பீட்டா அமைப்பை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நடிகர் விஜய் விடியோ மூலம் வலியுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் அனுப்பியுள்ள விடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களின் கலாசாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கவே தவிர பறிப்பதற்காக அல்ல. தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பாக்காமல் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் கட்சி பேதமின்றி தமிழன் என்கிற ஒரே உணர்வுடன் போராட்டத்தில் குதித்துள்ள அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் வெளியே அனுப்பி விட்டால் நான் சந்தோஷப்படுவேன். இத்தனை பிரச்னைக்கு காரணமாக இருக்கும் பீட்டாவை வீட்டுக்கு அனுப்பி விட்டால் தமிழகம் சந்தோஷப்படும் என அவர் கூறியுள்ளார்.