புதுச்சேரி புதுச்சேரியில் விமான எரிபொருள் சேமிப்பு மையம் அமைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்களின் (தமிழகம்-புதுவை) ஒருங்கிணைப்பாளர் யுவி. மன்னூர் தெரிவித்துள்ளார். அவர் புதன்கிழமை கூறியதாவது:
சர்வதேச தர நிர்ணயத்தின்படி புதுச்சேரியிலும் எரிபொருள் பிஎஸ்-4 தரத்திலான பெட்ரோல் நகரப்பகுதியில் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கிராமப்புறங்களிலும் பிஎஸ்-4 தர பெட்ரோல் விநியோகம் தொடங்கப்படும்.
புதுவையில் தற்போது 90 சதவீதம் பேர் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். விரைவில் அதை 100 சதவீதமாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 30000 எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுவை விமான நிலையத்தில் விமானங்கள் பயன்பாட்டுக்காக எரிபொருள் சேமிப்பு மையம் ஏற்படுத்தப்படும். காரைக்காலில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடர்பாக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எந்த எண்ணெய் நிறுவனத்துக்கு அத்திட்டம் ஒதுக்கப்படுகிறதோ அதற்கேற்ப செயல்படுத்தப்படும் என்றார் மன்னூர்.