புதுச்சேரி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிடட் அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதற்கு அனைத்து கட்சியினரும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமாகியுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
உச்சநீதிமன்றத்தில் ஒரு விஷயம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும்போதும், அது தொடர்பாக மத்திய அரசால் அவசர சட்டம் கொண்டுவர முடியும். உதாரணமாக கடந்த காலங்களில் ஆதிதிராவிடர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவசர சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளோம்.
பேரவையில் தீர்மானம்
வரும் 24-ம் தேதி கூட்டப்படும் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்ற அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம். தமிழக அரசும் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு அவசர சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றினால் மத்திய அரசு அனுமதி தர முடியும் என்றார் நாராயணசாமி.