கோவை: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக-வைச் சேர்ந்த 460 பேரை போலீஸர் கைது செய்தனர்.
கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் முத்துசாமி, தெற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் நாச்சிமுத்து ஆகியோர் தலைமையில் வடகோவை ரயில் நிலையத்தில் புதுதில்லியில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, நா.கார்த்திக் எம்.எல்.ஏ., இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி, விவசாய அணி அமைப்பாளர் பையா கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தடையை மீறி ரயிலை மறித்த 40 பெண்கள் உள்பட 460 பேரை போலீஸôர் கைது செய்தனர். இதே போல பீளமேடு ரயில்நிலையத்தில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சிங்கை ரவிச்சந்திரன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவ்வழியாக வந்த ஈரோடு-கோவை பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் போராட்டத்தில் கைவிட்டு கலைந்து சென்றனர்.