சென்னை: பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட கலாசார பாதுகாப்பு குழு சார்பாக இயக்குநர் சேரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் இந்த புகார் மனுவை வெள்ளிக்கிழமை நேரில் அளித்தனர்.
மௌன உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற வளாகத்துக்கு சென்ற இருவரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோரின் முன்னிலையில் நாசர், விஷால் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.
பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகர் நடிகைகளை அந்த அமைப்பிலிருந்து வெளியேற நடிகர் சங்கம் உத்தரவிட வேண்டும். நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்காத நடிகர் நடிகைகளை உடனடியாக சங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.
வெளியேறாத நடிகர் நடிகைகளுக்கு தொழில் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய நான்கு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனுவை நேரில் அளித்த சேரன், எங்கள் அமைப்பில் பீட்டா உறுப்பினர்கள் யாரும் இல்லை என்று விஷாலை அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.