தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி சென்னை மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது.
உச்ச நீதிமன்ற தடை காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இருப்பினும் இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடைபெறும் என அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கொதித்தெழுந்த இளைஞர் பட்டாளம் சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்து மிகப்பெரிய தொடர் போராட்டங்களை நடத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் உற்சாகத்துடன், சோர்வடையாமல் இருப்பதற்கு தேவையான உணவுபொருட்களை சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை ஏற்க மறுத்து ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்க கோரியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணி நிலவரப்படி, சுமார் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை பொதுமக்கள் திரண்டு வந்து எழுச்சிமிகு ஆதரவு அளித்துள்ளனர் இன்றும் மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடித்து வருகிறது.
அதேபோல் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அலங்காநல்லூரில் 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மதுரை தமுக்க மைதானத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.